Wednesday, December 31, 2008

நடுநிசிக் கள்வன்!

முத்து#10 – நடுநிசிக் கள்வன் - முன்னட்டை
முத்து#10 – நடுநிசிக் கள்வன் - முன்னட்டை
முத்து#10 – நடுநிசிக் கள்வன் - பின்னட்டை
முத்து#10 – நடுநிசிக் கள்வன் - பின்னட்டை
முத்து#156 – நடுநிசிக் கள்வன் - மறுபதிப்பு
முத்து#156 – நடுநிசிக் கள்வன் - மறுபதிப்பு
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#13 - நடுநிசிக் கள்வன்
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#13 - நடுநிசிக் கள்வன்
FLEETWAY SUPER LIBRARY – STUPENDOUS SERIES NO. 11 – THE BLINDING LIGHT
FLEETWAY SUPER LIBRARY – STUPENDOUS SERIES NO. 11 – THE BLINDING LIGHT
அதிரடி ஓபனிங்!
அதிரடி ஓபனிங்!
காளைக்கே வெற்றி கிடைக்கலாம்!
காளைக்கே வெற்றி கிடைக்கலாம்!
கள்வனைப் பிடிக்கக் காத்திருக்கும் மாயாவி!
கள்வனைப் பிடிக்கக் காத்திருக்கும் மாயாவி!
மாமன்னர் மாண்டிஜூமா!
மாமன்னர் மாண்டிஜூமா!

பச்சை வேதாளம்!

பச்சை வேதாளம்!
மாயாவியும் மூன்று குருடர்களும்!
மாயாவியும் மூன்று குருடர்களும்!
மாவீரன் மாண்டிஜூமா!
மாவீரன் மாண்டிஜூமா!

“யாரு முதல்ல வர்றாங்கன்றது முக்கியமில்ல,
லாஸ்ட்டுல யாரு ஃபர்ஸ்ட்டு வர்றாங்கன்றதுதான் முக்கியம்!”

-லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு (மன்மதன்)

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நீண்டதொரு பிரிவிற்குப்பின் மீண்டும் சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி! இத்தனை நாளாய் ஆவலுடன் காத்திருந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி!

புதியதொரு பணிநிமித்தம் நேர்ந்த இடமாற்றத்தினால் ஏற்பட்ட தொல்லைகள், தாமதங்கள், புதிய இடத்தில் மீண்டும் சகல வசதிககளையும் அமைப்பதற்குள் உண்டான சிக்கல்கள் காரணமாக வலையுலகத்திலிருந்து விலகிநிற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்போது ஓரளவிற்கு செட்டிலாகிவிட்டதால் இனியும் காலதாமதம் செய்யவேண்டாம் என்பதற்காகவே இந்த அதிரடிப் பதிவு!

இந்த காலகட்டத்தில் நான் எதிரிகளுக்கு பயந்து நமீதாவோடு தலைமறைவாகி விட்டதாக சில வேண்டப்பட்ட விரோதிகள் அவதூறு பரப்பி வருவதை நம்பவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

அ.கொ.தீ.க. தலைமையக இடமாற்றம் இன்னும் ஒரிரு வாரங்களில் முழுமையடைந்துவிடும். அதன்பின் முழுமூச்சாக முயற்சிகள் செய்து பழைய ஃபார்முக்கு வந்துவிடப் பார்க்கிறேன்! (இன்னமும் தலைமையகத்தில் இனையத்தொடர்பு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!)

சென்ற முறை ‘லார்கோ வின்ச்’ பதிவிட்டிருந்த அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவருக்கு நீங்கள் அனைவரும் நல்கிய நல்லாதரவுக்கு நன்றிகள். அவருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! லார்கோ வின்ச் திரைவிமர்சனம் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்

நான் இல்லாத சமயத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டுள்ளன. அவற்றையெல்லாம் பதிவின் முடிவில் அலசுவோம்! 

ஓ.கே., மொக்கை போட்டது போதும், இனி மேட்டருக்கு வருவோம்!

‘நடுநிசிக் கள்வன்’ என்ற பெயரைக் கேட்டாலே காமிக்ஸ் ரசிகர்களின் உள்ளங்களில் இனிய நினைவுகள் இன்ப ஊற்றாகப் பீறிடும். நானும் இதற்கு விதிவிலக்கல்ல!

இதில் சிறப்பு என்னவென்றால் முதன்முதலில் காமிக்ஸ் உலகிற்கு, குறிப்பாக ‘இரும்புக்கை மாயாவி’க்கு என்னை அறிமுகப்படுத்தியது 1987-ல் வெளிவந்த ‘நடுநிசிக் கள்வன்’-ன் மறுபதிப்புதான். நண்பர் ‘கிங் விஸ்வா’வும் எனக்கு நினைவு தெரிந்து இதுதான் நான் படித்த முதல் காமிக்ஸ் என்று கூறி தனது முதுமையை மறைக்கப் பார்க்கிறார்.

ஆனால் நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.ஷங்கர் விஸ்வலிங்கம் போன்றோர் இக்கதையை இதன் முதல் பதிப்பு ஜனவரி 1973-ல் வெளியான போதே படித்து மகிழும் பேறு பெற்றோர் ஆவர்.

அப்படி இந்தக் கதையில் என்னதான் இருக்கிறது என்று கேட்கும் அறியாப் பிள்ளைகளுக்கு சிலபல போதனைகளை அள்ளி வழங்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.

‘நடுநிசிக் கள்வன்’-ன் ஆரம்பமே ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஸ்பெயின் நாட்டில் பிரபலமான காளை மாட்டுச் சண்டை ஒன்றில் கதை தொடங்குகிறது. மாவீரன் ‘மாண்டிஜூமா’ காளையை அடக்க முயற்சிப்பதைக் கண்டு ஆர்ப்பரிக்கிறது மக்கள் கூட்டம்.

கூட்டத்தில் உணர்ச்சிவசப்படும் ஒரு ரசிகர் ‘வெற்றி வீரனுக்குதான்! இல்லையா நண்பரே?’ என்கிறார். அதற்கு ‘காளைக்கே வெற்றி கிடைக்கலாமென்று கருதுகிறேன்’ என ஒருவர் பதிலடியளிக்கிறார். அசந்து போகிறார் ரசிகர். மேலும் சண்டையின் முடிவிற்கு காத்திருக்காமல் முக்கியப்பணி இருப்பதாகக் கூறிக் கிளம்பி விடுகிறார். யாரிந்த மர்ம மனிதன். அவர்தான் ஈடிணையற்ற துப்பறியும் வீரரான ‘இரும்புக்கை மாயாவி’.

உலகெங்கிலும் பல்வேறு அருங்காட்சியகங்களிலிருந்து பழங்கால ‘அஸ்டெக்’ பொக்கிஷங்கள் நள்ளிரவில் களவு போகின்றன. ‘நடுநிசிக் கள்வன்’-ஐப் பிடிக்க மாயாவி மாட்ரிட் வருகிறார். மாண்டிஜூமாவின் வீரத்தைக் கண்டு வியக்கும் மாயாவி தனது பணிக்குத் தயாராகிறார்.

தனது இரும்புக்கரத்தைப் பார்த்துப் புன்முறுவலித்தவாறே ‘தயாரா நண்பனே?’ என்று கேட்கிறார். நாமும் அவருடன் சேர்ந்து சாகஸத்திற்குத் தயாராகிறோம். ஒதுக்குப்புறமான ஒரு மின்கம்பத்தில் ஏறி மின்சாரக் கம்பியை பற்றுகிறார். மாயாவியின் உடல் வழியே மின்சாரம் பாய்ந்து அவர் மாயமாய் மறைகிறார். நாம் பரவசமடைகிறோம்.

பிரபல ‘ப்ராடோ’ மியூசியத்தில் இருளின் போர்வையில் நடுநிசிக் கள்வனுக்காக மாயாவி காத்திருக்கிறார். பளபளக்கும் இரும்புக்கரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்படுகிறது. கள்வனும் வருகிறான். ஒரு தங்கத்தட்டை களவாடிச் செல்ல முயல்கிறான். மாயாவி அவனை தடுத்துப் பிடிக்கிறார். நடுநிசிக் கள்வனை பிடித்துவிட்ட திருப்தியில் மாயாவி அங்கிருந்து அகல்கிறார்.

பின்னிரவில் ஒரு மர்ம உருவம் தனது வைர மோதிரத்தால் ஜன்னலில் துளையிட்டு உட்புகுந்து அந்தத்  தட்டைக் களவாடிச் செல்கிறது. அது வேறு யாருமல்ல. காளைச் சண்டை வீரன் ‘மாண்டிஜூமா’வே ஆவான். இதற்குமுன் வந்து பிடிபட்டவன் அவனது அல்லக்கையான ‘சாஞ்சோ’.

தங்கத் தட்டுடன் தனது தாய்நாடான மெக்ஸிகோ செல்லும் மாண்டிஜூமா 'யுகாடான்' பிராந்தியத்திலுள்ள ஒரு புராதான கோவிலுக்குச் செல்கிறான். அங்கு ஒரு முரட்டுக் காளை கொட்டிலில் அடைபட்டு சீறிக்கொண்டிருக்க அதை மாண்டிஜூமா பாசத்துடன் நோக்குகிறான். காளையோ அவனை வெறுப்புடன் வெறிக்கிறது. முன்பு அக்காளையுடன் போட்ட சண்டையில் மாண்டிஜூமாவின் தலையில் காயம் ஏற்பட்டு புத்திபேதலித்துவிட்டதை நாம் இலைமறைகாயாக உணர்கிறோம். தனது அறிவுக்கண்ணை திறந்துவைத்தாக நம்பி அக்காளையைக் கொல்லாமல் பராமரித்து வருகிறான் மாண்டிஜூமா.

அடுத்த காட்சியில் நம்மை பிரமிக்கவைக்கும் விதத்தில் முழு ராஜாலங்காரத்தோடு அரியனையில் வீற்றிருக்கும் மாண்டிஜூமா அத்தங்கத்தட்டில் உள்ள ரகசியத்தைப் படிக்குமாறு ஒரு கிழட்டு மதகுருவிற்கு ஆனையிடுகிறான். அதில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி எதிரிகளின் பார்வையைப் போக்கும் ஆயுதம் பற்றிய ரகசியத்தைக் கண்டறிந்து கூறுகிறான் 'டாடெக்' என்னும் அம்மதகுரு.

அதைக்கேட்டு உற்சாகமடையும் மாண்டிஜூமா தன்னை எதிர்போர் அனைவரையும் வென்று அஸ்டெக் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவப்போவதாக சூளுரைக்கிறான். தன்னைத் தடுக்கும் டாடெக்கிடம் "இனிமேல் என்னைத் தலைவரே என்று அழைக்காதே மாமன்னரே என்று அழை" என்று உத்தரவிட்டு குரூரமாக நகைக்கிறான்.  

முதல் அத்தியாயம் முற்றுபெறுகிறது.

இரண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மாயாவி பிரிட்டனில் உள்ள ஒரு சீனப்பகுதியில் 'பச்சை வேதாளம்' என்று அழைக்கப்படும் ஒரு நிழற்படை ஏஜென்டை சந்தித்து நடுநிசிக் கள்வன் விவகாரம் இன்னும் முற்றுபெறவில்லை எனவும், மாண்டிஜூமாதான் இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்றும் அறிகிறார். மாண்டிஜூமாவைப் பிடிக்க மெக்ஸிகோ கிளம்புகிறார் மாயாவி. இதுவும் அற்புதமான சித்திரங்களைக்கொண்ட ஒரு அருமையான கட்டமாகும். குறிப்பாக பச்சை வேதாளத்தின் உருவம் நம்மை திகிலடையச் செய்கிறது (சிறுவயதிலும், இப்போதும்).

கதைக்களம் மெக்ஸிகோவுக்கு மாறுகிறது. அங்கே சம்பவங்கள் சூடுபிடிக்க ஆரம்பிக்கின்றன. அஸ்டெக் படையினர் மெக்ஸிகோ நகரை ஆக்ரமிக்கின்றனர். எதிர்ப்போர் அனைவரையும் ஹெலிகாப்டரில் அமைக்கப்பட்ட பயங்கர ஒளி விளக்கு குருடாக்குகிறது. அஸ்டெக் படை மாபெரும் வெற்றி பெறுகிறது.

மெக்ஸிகோ வந்தடையும் மாயாவியின் விமானத்தை அங்கிருந்து தப்பிக்கத் துடிக்கும் குருடாகிப்போன மக்கள் கூட்டம் சூழ்ந்துவிட மாயாவி மீண்டும் மின்சாரத்தின் துணையோடு அங்கிருந்து நைஸாக நழுவுகிறார். கடந்து செல்லும் அஸ்டெக் படையில் ஒரு வாகனத்தைத் தாக்கி அதில் ஒரு வீரனை விசாரிக்கிறார். உண்மைகளைக் கண்டறிகிறார்.  'யார் நீ?' என்று முனகும் வீரனிடம் 'எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லி பழக்கமில்லை!' என பன்ச் அடித்துவிட்டு அங்கிருந்து ஒரு விமானத்தைக் கிளப்பிகொண்டு 'யுகாடான்' விரைகிறார்.

இதற்கிடையே... (காமிக்ஸ் உலகில் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை இதுதான்!) வழக்கம் போல அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா இங்கும் அஸ்டெக் படையை எதிர்த்து மூன்று போர் விமானங்களை அனுப்புகிறது. அவர்களும் ஒளிக்கதிருக்கு பலியாகின்றனர். 

மூன்றாவது அத்தியாயம்! இதன் தொடக்கத்திலும் அற்புதமான காட்சியமைப்பு. கண் குருடாகிப்போன அமெரிக்க விமானிகளை அரூபமாக இருக்கும் மாயாவி வழிநடத்திச் செல்வார். இந்தக் காட்சியமைப்பின் IRONY (இதற்கு சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை, அறிஞர்கள் உதவவும்) எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அப்போதும், இப்போதும், எப்போதும்! தலைசிறந்த காமிக்ஸ் காட்சியமைப்புகளில் இக்காட்சி தனித்து விளங்கும் என்பதில் ஐயமில்லை!

அமெரிக்காவின் அத்துமீரலினால் வெகுண்டெழும் மாண்டிஜூமா அமெரிக்கா மீது படையெடுத்து டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரை சூறையாடி வெல்கிறான். இவனைத் தடுக்க யாருமே இல்லையா? ஏன் இல்லை? இரும்புக்கை மாயாவி இருக்கிறாரே! அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? விமானத்தில் யுகாடானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்!

அப்போது அவருக்கு எதிரில் ஒளிக்கதிர் ஏந்திச் செல்லும் ஹெலிகாப்டர் வருகிறது! மாயாவி மீது ஒளியை பாய்ச்சுகிறது! என்ன ஆனது? இங்கே சில டுபாக்கூர் சம்பவங்கள் நடைபெறும். மாயாவியை மட்டும் ஒளிக்கதிர் ஒன்றும் செய்யாதாம்! ஏனென்றால் அப்போது அவர் அரூபமாக இருப்பாராம், ஒளிக்கதிர் அவரை ஊடுருவி சென்று விடுமாம்!

டுபாக்கூர் சம்பவங்கள் நாலாவது அத்தியாயத்திலும் தொடர்கின்றன! மாயாவியின் சுயரூபம் வழக்கம் போல அவருக்கு இக்கட்டை உண்டாக்கும் சூழலில் திரும்புகிறது! எதிரிகள் அவரது விமானத்தை சுட்டு வீழ்த்தி அவரது இரும்புக்கரத்தைப் பிரித்து மாண்டிஜூமாவிடம் கைதியாகக் கொண்டு செல்கின்றனர். அங்கே அவரை சூரியனுக்கு பலியிடுமாறு கிழட்டு மதகுரு 'டாடெக்'கிற்கு உத்தரவிடுகிறான் மாண்டிஜூமா.

பலிபீடத்தில் இருக்கும் மாயாவியைக் காக்க திடீரென புயல் வருகிறது. மின்னல் தாக்கி இறக்கிறான் டாடெக். அதே மின்னல் மாயாவியை மறையச் செய்கிறது. இரும்புக்கரம் இல்லாமல் தப்பி ஓடுகிறார். மாண்டிஜூமாவுடன் ஒற்றைக்கையுடன் மோதுகிறார். மாயாவி மீது ஒளிக்கதிரை ஏவுகிறான் மாண்டிஜூமா. மாயாவி கண்ணைப் பொத்திக் கொள்கிறார். மாண்டிஜூமா நேராக ஒளிக்கதிரைப் பார்த்துக் குருடனாகிறான்!

என்னாங்கடா இது? யார் காதுல பூ சுத்துறீங்க? என கேட்கும் மனோநிலையில் சிறுவயதிலும் சரி,  இப்போதும் சரி நான் இல்லை.  மாயாவியின் சாகஸங்களில் மயங்கி அவரை மன்னிப்போம்!

இத்தனை காதுலபூ சமாச்சாரங்களையும் ஈடு கட்டும் விதமாக அமைக்கிறது க்ளைமாக்ஸ்! குருடாகிப்போன மாண்டிஜூமா கால் இடறி முரட்டுக் காளை அடைபட்டிருக்கும் கொட்டகைக்குள் விழுகிறான். மாட்டின் உறுமலைக் கேட்டு சட்டையைக் கழற்றுகிறான். இறுதி மோதலுக்கு தயாராக நிற்கிறான்! இக்காட்சியின் தாக்கத்தை விவரிக்க எனக்குத் தமிழாளுமை போதாது என்பதால் படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!

அடடா! என்னே வீரம்! கண் தெரியாத போதிலும் காளைக்குப் போக்கு காட்டுகிறான்! அவனது முடிவு நெருங்கும் பொது மாயாவி அவனைக் காக்கிறார். அவனது வீரத்தை மெச்சிவிட்டு ஒளிக்கதிரை அழித்துவிட்டு அங்கிருந்து வழக்கம் போல நழுவுகிறார் மாயாவி. மாண்டிஜூமாவை அமெரிக்க இராணுவம் பரிதாபத்திற்குரிய நிலையில் கைது செய்கிறது. செத்த பாம்பை அடிப்பது தானே அவர்களது வழக்கம்!

கதைக்கு சுபம் போட்டாயிற்று! ஆனால் நம் மனதை விட்டகல மறுக்கிறான் மாண்டிஜூமா! இக்கதையின் வெற்றி மாண்டிஜூமாவை சித்தரித்த விதத்தில்தான் அடங்கும்! தலைசிறந்த காமிக்ஸ் வில்லன்களில் அவனும் ஒருவன். எங்கே அவன் போட்டிக்கு வந்தால் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் அம்மாவீரனை இருட்டடிப்பு செய்ய வேண்டியதாகி விட்டது!

இப்படியொரு அறிமுகத்திற்குப்பின் அது யாராயினும் அவர்கள் மனதில் ‘இரும்புக்கை மாயாவி’ பச்சக்கென்று ஒட்டிக் கொள்வதில் ஆச்சரியமில்லை. 'இரும்புக்கை மாயாவி' எனது ஃபேவரைட் நாயகன் ஆனதற்கும், முத்து காமிக்ஸ் எனது ஆஸ்த்தான காமிக்ஸ் ஆனதற்கும் இக்கதை தனிப்பெரும் காரணியாகும்.

இங்கிலாந்தின் 'ஃப்ளீட்வே' (FLEETWAY) நிறுவனம் ஜூன் 1967-ல் வெளியிட்ட டைஜஸ்ட் வடிவிலான காமிக்ஸ்களில் "ஸ்டுபென்டஸ் ஸீரீஸ்" (STUPENDOUS SERIES) எனும் தொடரில் பதினோராவது இதழான 'தி ப்ளைண்டிங் லைட்' (THE BLINDING LIGHT) எனும் கதைதான் நடுநிசிக் கள்வனின் மூலம்.

ஜனவரி 1973-ல் பொங்கல் மலராக முத்து காமிக்ஸின் பத்தாவது இதழில் முல்லை தங்கராசனின் முத்தான மொழிபெயர்ப்பில் இக்கதை முதன்முதலில் தமிழுக்கு வந்தது. இந்த இதழுடன் பொங்கல் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன்?! முடிந்தால் அந்தப் பரிசை இன்னும் பத்திரமாக வைத்திருந்தீர்களானால் புகைப்படம் அனுப்புங்களேன்?!

அதன் பிறகு முத்து # 156 - பிப்ரவரி 1987-லும், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 13 - ஜூன் 2003-லும் இக்கதை மறுபதிப்பு செய்யப்பட்டது. இன்னும் எத்தனை முறை வந்தாலும் இக்கதைக்கான வரவேற்பு காமிக்ஸ் ரசிகர்களிடையே குன்றவே குன்றாது!

இக்கதைக்கு தமிழில் கிடைத்த வெற்றிக்கு முல்லை தங்கராசனின் மொழிபெயர்ப்பு மாபெரும் பங்கு வகிக்கிறது. பதிவின் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டிய மறக்கவொண்ணா சம்பவங்களை இவரது மொழி நடை மேலும் மெருகூட்டுகிறது. இவரைப் பற்றி காமிக்ஸ் வலைப்பூ சங்கத்தினர் யாரேனும் கூடிய விரைவில் பதிவிடுங்களேன்? அய்யம்பாளையத்தார் கவனிக்கவும்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆங்கிலப் பதிப்புகளைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அளித்துதவிய நண்பர் 'முத்து விசிறி'க்கு மனமார்ந்த நன்றிகள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

இவை வலையுகத்திலிருந்து நான் விலகியிருந்த நாட்களில் நிகழ்ந்த மாற்றங்களை எனக்கு நானே நினைவு படுத்திக் கொள்ள குறித்து வைத்துக் கொண்டவை.

  • ஓட்டெடுப்பு முடிந்துவிட்டது. தமிழ் காமிக்ஸ் உலகின் தலைசிறந்த வில்லத்தனம் புரியும் அமைப்பாக அ.கொ.தீ.க. பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது! இரண்டாவது இடத்தில் அடியேனும் வந்துள்ளேன்! இதை அ.கொ.தீ.க.வின் வெற்றிக்கே சமர்ப்பிக்கிறேன். நல்ல/கள்ள ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி! கட்சிமாறி நல்லவனாக திருந்திவிட்ட துரோகி ‘ஸ்பைடர்’ ஆரம்பத்தில் முன்னிலை வகித்தாலும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஒரு வாக்கு கூட பெறாமல் மண்ணைக் கவ்வினான். ஏன்னா நாங்க கள்ள ஓட்டு போட ஆரம்பிச்சதே அப்பதானே! இதைத்தான் ‘மன்மதன்’ படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ‘சிம்பு’ பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு  கூறுவார்.
  • 'வெகுமதி!' போட்டிக்கு சென்ற முறை யாருமே விடையளிக்க முன்வரவில்லை! இது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அ.கொ.தீ.க.வின் தியாகச் செம்மல்களில் ஒருவரான 'கருப்பு வேங்கை'யை உங்களில் யாருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்! இம்முறையேனும் கொஞ்சம் ஆர்வம் காட்டுங்களேன்…
  • நண்பர் க.கொ.க.கூ. பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டார். இத்தனை நாள் நான் வலையுலகிலிருந்து விலகியிருந்ததால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியவில்லை. மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அவர் ஒன்றும் மாபெரும் குற்றம் இழைக்கவில்லை என்பதே என் கருத்து. காமிக்ஸ் என்பது கடல். அதில் நாம் எல்லோரும் முத்தெடுக்க வாய்ப்புள்ள போது இவ்வாறு ஒருவருக்கொருவர் துவேஷம் கொள்வது தேவையில்லை! அவரது சமீபத்திய பதிவுகளான குண்டன் பில்லியும் டெக்ஸ் வில்லர்-ம் மிக அருமையாக உள்ளன.
  • நண்பர் ரஃபிக் ராஜா ராணி காமிக்ஸ் பற்றி பிரத்தியேக வலைப்பூ ஒன்று தொடங்கியுள்ளார்.
  • சிறுவர் இலக்கியவாதி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்கள் முடிவேயில்லாத கன்னித்தீவு சிந்துபாத் பற்றி அருமையாக ஆய்ந்து எழுதியுள்ளார்.
  • மொக்கை காமிக்ஸ் (எ) தலைசிறந்த ஒலக காமிக்ஸ் என்று புதிதாக ஒலக காமிக்ஸ் ரசிகர் ஒருவர் கிளம்பியுள்ளார். உஷாராக இருக்க வேண்டும் போலிருக்கிறதே?
  • முத்து விசிறி டெக்ஸ் வில்லர் பற்றிய இடுகைகளிட ஆரம்பித்திருக்கிறார். சுவையான விருந்து காத்திருக்கிறது.
  • கனவுகளின் காதலன் லார்கோ வின்ச் திரைவிமர்சனம் எழுதியுள்ளார். இவரது கோட் நேம் மின்னல் ப்ற்றிய பதிவு ஆர்வத்தைத் தூண்டுகிறது. 
  • நண்பர் கிங் விஸ்வா ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு இடுகை இட்டுள்ளார். அவரும் யார் கூடயாவது பிஸியாக இருந்தாரோ, என்னவோ? புத்தாண்டு முதல் அவரும் என்னைப் போல் ரெகுலராக ஆஜராகி விடுவதாக உறுதி பூண்டுள்ளார். 
  • நண்பர் ஷிவ் ஹிந்தியில் வெளிவந்த ரோட்ஸைட் ரோமியோ அனிமேஷன் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காமிக்ஸ் பற்றி பதிவிட்டுள்ளார்.
  • பங்கு வேட்டையர் இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பதென்று கங்கனம் கட்டிக்கொண்டு அலைகிறார் (‘கங்கனா ரனாவத்’தையல்ல). வேதாள நகரம் ஃபுல் ஸ்பீடில் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய இடுகைகள்:

'முத்து'வின் முதல் இதழ் - 'இரும்புக்கை மாயாவி':

'இரும்புக்கை மாயாவி':

'முத்து' இதழ்களின் முழு விவரம்:

ஃப்ளீட்வே/முத்து - ஒரு பார்வை:


'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' பற்றிய இடுகைகள்:

18 comments:

  1. தலைவரே,

    மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்சி அடைகிறேன்.
    இப்பதிவிற்காக எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் தெரியுமா, பின்னி பெடலெடுத்து விட்டீர்கள்.

    நநிக மாயாவியின் கதைகளிலேயே எனக்குப் பிடித்தமானது. காரணங்கள் என்று எதுவுமில்லை. முதன் முதலாக மாயாவியை நான் சந்தித்தது அதில் தான், ஆனால் 73 ல் அல்ல சற்று பின்பாக என்றே எண்ணுகிறேன். ஆனால் அது தான் முதல் பதிப்பாக இருக்க வேண்டும்.

    மாண்டிஜுமாவிற்காக மாயாவி மியூசியத்தில் காத்திருக்கும் காட்சி, அத்தருணத்தில் என் இதயம் துடித்த துடிப்பு சொல்லி விளக்க முடியாதது.

    அற்புதமான ஸ்கேன்களிற்கு நன்றி, ஒரு முறை என் சிறு வயதிற்கு சென்று வந்தேன்.

    நமீதா எப்படி நலமாக உள்ளாரா?

    உலகம் சுற்றும் வாலிபனில், கடைசிக் காட்சிகளில்
    எம்ஜிஆர் மாண்டிஜுமாவை காப்பியடித்தது உலகம் அறிந்ததே.

    இவ்வாறான சிறப்பான பதிவுகளை உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறேன்.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  2. //
    உலகம் சுற்றும் வாலிபனில், கடைசிக் காட்சிகளில்
    எம்ஜிஆர் மாண்டிஜுமாவை காப்பியடித்தது உலகம் அறிந்ததே.///


    //இதன் முதல் பதிப்பு ஜனவரி 1973-ல் வெளியான போதே படித்து மகிழும் பேறு பெற்றோர் ஆவர்.//


    உலகம் சுற்றும் வாலிபன் அதற்கு முன்பே வந்துவிட்டது. நண்பரே

    ReplyDelete
  3. நண்பரே.. பூச்சுற்றும் விவகாரங்களே காமிக்ஸ் ஹீரோக்களின் சாகஸம். என்வே கவலையில்லாமல் சாகஸம் என்ற பதத்தையே உபயோகியுங்கள்

    ReplyDelete
  4. நண்பர் சுரேஷ்,

    உலகம் சுற்றும் வாலிபனை பற்றி நான் எழுதியது வேடிக்கைக்காகவே, எவரையும் மனம் வருந்த செய்ய அல்ல.

    புத்த விகாரத்தில் நம்பியாருடன் வாத்தியார் மோதும் காட்சிக்கு நான் இன்றும் ரசிகன்.

    தவறாயின் மன்னியுங்கள்.

    ReplyDelete
  5. நடுநிசிக் கள்வன் பற்றி இத்தனை தகவல்களா... அருமையான தகவல்கள். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    நண்பர் shankarvisvalingam அவர் எழுதிய கமெண்ட்ஸ் வைத்து அரசியல் Controversy ஏதும் வந்துவிடும் என்றும் எதற்கு வம்பு என்று மன்னிப்பு கேட்டு விட்டார்.. சிரிப்பு தான் போங்கள்.......

    ReplyDelete
  6. மருத்துவரே, சிறப்பான விமர்சனம் இது.

    //இந்த காலகட்டத்தில் நான் பயந்து நமீதாவோடு தலைமறைவாகி விட்டதாக சில வேண்டப்பட்ட விரோதிகள் அவதூறு பரப்பி வருவதை நம்பவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்// இதனை நாங்கள் எப்படி நம்புவது? நமிதா தன்னுடைய ஆண் நண்பராகிய பரத் கபூரை ஒரு மாதம் முன்பே பிரிந்து விட்டதாக தகவல். நீங்களும் ஒரு மாதமாக எந்த இடுகையும் இடாமல் தலைமறைவாக இருந்தீர்கீர்கள். ஒன்று + ஒன்று = இரண்டு அல்லவா?

    //இன்னமும் தலைமையகத்தில் இனையத்தொடர்பு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது// நீங்கள் இருக்கும் புதிய தலைமையகத்தில் இன்னும் மின்சார வசதியே வரவில்லை என்று நண்பர் ஜோஸ் எனக்கு கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினார். அது உண்மையா? Do you want me to forward that SMS or the lengthy mail to you?

    //நண்பர் ‘கிங் விஸ்வா’வும் எனக்கு நினைவு தெரிந்து இதுதான் நான் படித்த முதல் காமிக்ஸ் என்று கூறி தனது முதுமையை மறைக்கப் பார்க்கிறார்// என்னை விட வயதி மூத்தவராகிய நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.

    //இனிமேல் என்னைத் தலைவரே என்று அழைக்காதே மாமன்னரே என்று அழை" என்று உத்தரவிட்டு குரூரமாக நகைக்கிறான்// இதைப் போலவே திரு வெங்கி அவர்களும் தன்னை அனைவரும் பேரரசர் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவு இட்டதை நினைவில் வைத்து இருக்கிறீர்களா?

    //வழக்கம் போல அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா இங்கும் அஸ்டெக் படையை எதிர்த்து மூன்று போர் விமானங்களை அனுப்புகிறது// திரு அய்யம்பாளையம் அவர்களை போலவே நீங்களும் உங்களுடைய அரசியலை இங்கு புகுத்தி விட்டீரே?

    //அடடா! என்னே வீரம்! கண் தெரியாத போதிலும் காளைக்குப் போக்கு காட்டுகிறான்// உங்களுடைய இரண்டாம் பதிவில் நான் இதனை கூறி இருப்பேன். தமிழ் காமிக்ஸ் உலகில் தலை சிறந்த எதிர் நாயகன் இவர்.

    //அமெரிக்க இராணுவம் பரிதாபத்திற்குரிய நிலையில் கைது செய்கிறது. செத்த பாம்பை அடிப்பது தானே அவர்களது வழக்கம்// தங்களுடைய வருங்கால அரசியல் கனவுகளை இப்போதே வெளிப்படுத்தி உங்கள் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி விட்டீரே?

    //நண்பர் கிங் விஸ்வா ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு இடுகை இட்டுள்ளார். அவரும் யார் கூடயாவது பிஸியாக இருந்தாரோ, என்னவோ? // இதில் "அவரும்" என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும், அதனால் மருத்துவர் யாருடனோ பிஸியாக இருந்ததை உறுதி படுத்தி விட்டீரே?

    நன்றியுடன் கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  7. பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

    நடுநிசி கள்வன் கதையை நானும் உங்களை போலவே எண்பதுகளில் தான் படித்தேன். என்னை காமிக்ஸ் ரசிகனாக மாற்றிய கதைகளில் இதுவும் ஒன்று. அஸ்டெக் என்று ஒரு ராஜ்ஜியம் இருந்ததாக எனககு தெரிய வந்தது இந்த கதையில் தான். மேலும் பல விஷயங்களை நான் காமிக்ஸ் வாயிலாக கற்ற காலம் அது. கிங் விஸ்வா இந்த பதிவை படித்து இருந்தால் அவர் இதனையும் அவருடைய அவார்ட் வரிசையில் சேர்த்து இருப்பார்.

    நீங்கள் தலைமறைவாக இருந்த கால கட்டத்தில் உங்களுடைய உல்லாச வீடியோ ஒன்று யு-டியூப்'இல் வந்ததாமே? எப்படியோ, நீங்கள் நன்றாக இருந்தால் சரி.

    ஆனால் உங்களின் நெடுநாள் நண்பனாகிய நான் இது போன்ற வதந்திகளை எல்லாம் நம்பவில்லை. வாசகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றே இதை இங்கே கூறுகிறேன். வேறு எந்த எண்ணமும் இல்லை.

    ஆமாம், நிங்களும் கிங் விஸ்வா'விடம் அந்த கேள்வியை கேட்டேர்களா? (ஆபீஸ், கோட்).

    செழியன் - சென்னையிலிருந்து.

    ReplyDelete
  8. நண்பரே,

    உங்களிடமிடம் இந்த பதிவு வந்த அன்று உரையாடிய போது இந்த பதிவு குறித்து இன்னும் பல தகவல்களை சொன்னீர்கள். சில கதைகளை பற்றி எழுதும் போது ஒரு பதிவு என்ற கட்டுப்பாட்டுடன் எழுத வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து தொடர் பதிவுகள் வெளியிட்டாலும் நாங்கள் என்ன வேண்டாமென்றா சொல்ல போகிறோம்.

    நீங்கள் யாருடனோ சுற்றுகிறீர்கள் என பலவித வதந்திகள் சென்னையிலிருந்து கிளம்பி பரவியது. யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். இது குறித்து தக்க நடவடிக்கைகள் தலைவரான நீங்கள்தான் எடுக்க வேண்டும்.

    செழி அவர்களே, ஏதோ ஆபிஸ் கோட், கேள்வி என்று கிங் விஸ்வாவை பற்றி ஏதோ எழுதியிருக்கிறீர்கள். என்ன என்று புரியவில்லை. விளக்கினால் மகிழ்வேன்.

    ReplyDelete
  9. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

    மிகவும் அருமையாக இருந்தது. வீட்டை கட்டிப் பார், கல்யாணம் செய்துப் பார் என்று சும்மாவா சொன்னார்கள். அதில் உள்ள பாடு என்னை படுத்தி விட்டது. (வீட்டு கட்டுவது - என்னுடைய விடயம்). பொங்கல் நாளில் புது வீட்டில் புக நினைத்து உள்ளேன். அதனால் தான் யாருடைய வலைப் பூவிலும் பதிவிட இயலவில்லை. வெகு விரைவில் நானும் ஒரு பதிவை இட்டு விடுகிறேன்.

    நன்றியுடன்,
    க.கொ.க.கூ

    ReplyDelete
  10. காமிக்ஸ் டாக்டருக்கு வாழ்த்துக்கள், திரும்ப உதயமானதற்கு. தங்கள் சென்ற பதிவை பார்த்து விட்டு, இனி நீங்கள் அடுத்த லயன் காரிகன் இதழ் வரை உண்மையிலேயே மறைவாக நமீதாவுடன் ஜல்சா பண்ணி கொண்டு இருப்பதாக பரவி கொண்டு இருந்த வதந்தியை (??!!!!) பொய்யாகி விட்டீர்கள் :)

    // நேர்ந்த இடமாற்றத்தினால் ஏற்பட்ட தொல்லைகள் //
    உண்மை உண்மை, இட மாற்றம் ஒருவரின் வழக்கமான பழகங்களில் ஒரு தொய்வு ஏற்படித்தி விடும் என்று அதை அனுபவித்த நானும் உணர்வேன். சமீபத்தில் முத்து விசிறி வலை பூவில் ஏற்பட்ட தொய்வுக்கும் இதுவே காரணம் என்று தமிழ் கூறும் நல்வுலகம் அறியும்.

    // தலைமையகத்தில் இனையத்தொடர்பு வசதி இல்லை //
    என்ன கொடுமை சார் இது.... தளமையகதிற்கே இந்த நிலையா... மனம் கொந்தளிக்கிறது..... :)

    மாண்டிஜூமா உண்மையிலேயே ஒரு வித்தியாசமான வில்லன் தான். இந்த கேரக்டர் மட்டும் ஆங்கில கமிக்ச்களில் தோன்றி இருந்தால், ஜவ்வு போல அதை இழுத்து 10,20 வருடங்கள் ஒப்பேற்றி இருப்பார்கள். இங்கிலாந்து காமிக்ஸ் உரிய சிறப்பால், அந்த கொடுமையில் இருந்து நாம் தபிதோம். ஒரு புத்தகம், ஒரு பதிவு என்னும் தங்கள் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கிறது. தொடர் கதை போல் படிக்கும் பழக்கம் இன்னும் என்னிடையே அவ்வளாவாக வளர வில்லை...

    இந்த் கதையை நான் படித்து காமிக்ஸ் க்ளாசிக்ஸ் ல் அது வெளி வந்த பொது தான் என்பதால், அதன் காதில் பூ சுற்றும் வேலைகள் வளர்ந்த பிராயத்தில் அவ்வளவாக எனக்கு மனம் ஒவ்வவில்லை என்பது உண்மை. ஆனால் தங்கள் எழுத்தில் மூலம் அதை மீதும் ஒரு முறை படிக்க தூண்டி விட்டேர்கள்.

    பி.கு.: 1. ராணி காமிக்ஸ் வலைபூவிற்கு மரியாதை சேர்த்ததற்கு நன்றிகள் பல. அதில் வெளியிட படும் இதழ்களுக்கான ஒரிஜினல் தேடல்களில் அ.கொ.தீ.க. உதவும் என்று நம்புகிறேன்.
    2. பி.கு.வில் காமிக்கியல் பற்றி வெளிச்சம் இடாதது ஏனோ? தங்கள் பின்னூட்டங்களையும் அங்கு இன்னும் காணாதது வருத்தமே.
    3. எங்கள் அருமை நாயகன் ஸ்பைடர் ஐ கள்ள வோட்டில் தொகடித்த விஷத்தை நான் அவருக்கு தெரிய படுத்தி விட்டேன். சீகுரத்தில், மின்சாரம் கூட இல்லாத அ.கொ.தீ.க. தலைமையகம் முற்றில் அளிக்க படும் என்று உங்களை எச்சரிக்கிறேன். அப்படியே லாரன்ஸ் & டேவிட் கூட்டணிக்கும் டிக்கெட் போட்டாயிற்று.... ஹி ஹி ஹி ஹி ... :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  11. தலைவரே,
    இந்த தடவை பரிசு எனக்கு தான். வெகுமதி பகுதியில் உள்ள நபர் உங்கள் அபிமான ஜானி நீரோ கதையாகிய "கொலைக் கரம்' என்னும் கதையில் வரும் வில்லின் ஆவார். இவர் ஒரு முன்னால் ராணுவ வீரர். வியட்நாம் போரில் பல எதிரிகளை ஒரே கையால் கழுத்தை நெரித்து கொள்ளும் சிறப்பு தன்மை பெற்றவர்.

    என்ன சரிதானே?

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  12. காமிக்ஸ் டாக்டரே,

    வாராது வந்த மாமணி போல வந்து கலக்கி விட்டீர்கள் தலைவரே.நடுநிசி கள்வனில் இரும்புக்கை மாயிவியை விட என்னை மிகவும் கவர்ந்தவர் மாண்டிஜூமாதான் காமிக்ஸ்'களில் நான் தெரிந்து கொண்ட வரலாறுகளின் படி செவ்திந்தியர்கள், அஸ்டெக்'கள், மாயன்'கள், ஆப்ரிக்க பழங்குடியினர் போன்றோரின் மீது அளவற்ற பாசம் உண்டு. அவர்கள் இரோப்பியரை பழிவாங்குவது போன்ற கதைகளில் நான் இரோப்பியார்கள், அமெரிக்கர்கள் தோற்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். (அது நமது ஹீரோ மாயாவியாக இருந்தாலும் கூட).

    தலை கேட்ட தங்க புதையலில் அஸ்டெக் மன்னன் மற்றும் மக்கள் எப்படி வஞ்சிக்க படுகிறார்கள் என்பதை அறியும் போது மனம் பதறும். இந்த நிகழ்வுகள் முழுவதும் கற்பனை என்று கூட சொல்லி விட முதியாது. வரலாற்று பக்கங்களும் இப்படித்தான் பேசுகின்றன.

    நண்பர் கிங் விஸ்வா என்னுடைய பதிவில் அரசியல் வாடை அடிப்பதாக கூறியிருக்கிறார். நாம் தனி மனிதர்கள் அல்ல.(சிடிசன் படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் கூறுவது போல - நான் தனி ஆளு இல்ல) சமுதாய, அரசியல் அமைப்புகளில் அங்கங்கள்தம் நாம். ஆகையால் அரசியல் நிகழ்வுகளை நாம் சொல்லும் விஷயங்களில் கலந்து சொல்வது ஒன்றும் தவறு அல்ல. இது நம் சொல்ல நினைக்கும் விஷயத்தை வாசகனுக்கு (பாவப்பட்டவர்கள்...!) எளிதில் கொண்டு பொய் சேர்க்கும்.

    இறுதியில் தரும் பிற வலைப்பதிவுகளை பற்றிய வியங்களை இன்ன்னும் சற்றே பெரிய எழுத்துகளில் தந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  13. சிறப்பான விமர்சனம் !

    ReplyDelete
  14. ஒரு பழைய காமிக்ஸ் ஐ எப்பிடி ஆலச வேண்டுமோ அதை மிக சரியாக செய்து இருக்கீர்கள். ஆனால் எல்லோரும் இரும்பு கை மாயாவி ஐ பற்றியே பதிவு வருகிறது. எங்கள் தங்க தலைவர், வலை மன்னன், குற்ற சக்கரவர்த்தி, நீதி காவலன் ஸ்பைடரை பற்றி எபொழுது எழுதுவீர்கள்?

    ReplyDelete
  15. க கொ க கூ

    சரியான விடை சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் அடையாளத்தை தலைவரிடம் சொல்லி வெகுமதியை பெற்றுக் கொள்ளவும்.

    ReplyDelete
  16. மான்ட்ஜுமா போன்ற நல்ல வில்லன்களை அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இது போன்ற சிறப்பான வில்லன்களை (உதாரணத்திற்கு மங்கூஸ் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்) அறிமுகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  17. தலைவரே,

    தங்களின் இந்த பதிவு சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல இருக்கிறது. இதையெல்லாம் விட்டு விட்டு நானும் எழுதுகிறேனே? என எனக்கு தோன்றி விட்டது.

    உங்கள் பதிவை படித்து விட்டு, உங்கள் மொழிநடையை பார்த்து ஒரு மணி நேரம் என் அலுவலகத்தில் உட்கார்ந்து அழுதேன்.

    இனிமேல் உங்களை கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டேன். உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாமல் சென்ற வாரம் உங்களை புண்படுத்தி விட்டேன். இதற்கு பரிகாரமே இல்லையா? என தினமும் கண்ணீரில் மிதக்கிறேன்.

    ReplyDelete
  18. தமிழ் காமிக்ஸ் உலக ரசிகர்களே,

    மேலே உள்ள பின்னுட்டம் நான் இட்டது அல்ல. யாரோ சில விஷமிகள் என்னுடைய பெயரை உபயோகப் படுத்தி இட்டு உள்ளனர். நான் எப்போதும் என்னுடைய ஜீமெயில் ப்ளாக்கர் ஐ.டீ'ஐ கொண்டே பின்னுட்டம் இடுவேன் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

    என்னுடைய பெயரை உபயோகப் படுத்தும் அந்த புண்ணியவான் எதற்காக அப்படி செய்கிறார்? ஏன் சென்ற வாரம் நடந்த சம்பவத்தை பற்றி எழுதுகிறார்? எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் புகழ் பெற்ற நபர்களின் நிழலில் அவரும் சில மணித்துளிகள் இருந்து புகழ் பெற எண்ணுகிறாரோ என்னவோ?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!